இருபதே நாளில் 20 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது கூகுள் ப்ளஸ். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.
பேஸ்புக்குக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் ப்ளஸ். சோதனை ஓட்டமாக அறிமுகமானபோதே பல லட்சம் பேர் இதனைப் பயன்படுத்த முனைந்ததால், சர்வர் திணறும் அளவுக்கு நிலைமை போனது.
இப்போது முழு வீச்சில் பயனர்களுக்கு கிடைக்கிறது கூகுள் ப்ளஸ். தினமும் பல லட்சக்கணக்கானோர் இந்த தளத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் வரையிலான 20 நாட்களில் உலகம் முழுக்க 20 மில்லியன் பயனர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.
இவர்களில் 50.31 லட்சம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 20.85 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 8.7 லட்சமும், ஜெர்மனிகாரர்கல் 7.1 லட்சமும், பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் 5 லட்சம் பேரும் பயனர்களாக சேர்ந்துள்ளனர்.
கூகுள் ப்ளஸ்ஸில் பயனர்கள் சேரும் வேகத்தைப் பார்த்தால், அதிவிரைவில் உலகின் டாப் சமூக தளமாக அது வந்துவிடும் என காம்ஸ்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது ஒரு நாளைக்கு 7.63 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்த வண்ணம் உள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 5 மாதங்களில் கூகுள் ப்ளஸ் 100 மில்லியன் பயனர்கள் எண்ணிக்கையைத் தாண்டிவிடும் என ஆன்செஸ்ட்ரி இணையதள நிறுவனர் பால் ஆலன் குறிப்பிட்டுள்ளார்.